தங்கை இறந்த அதிர்ச்சியில் அக்காள் மரணம்... ஆத்தூரில் சோகம்!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் தங்கை இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்த அக்காள் அதிர்ச்சியில் மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி. இவரது மனைவி அன்னமுத்து (65). இவர்களுக்கு பிச்சை ஆரோக்கியம் என்ற மகன் உள்ளார். அன்னமுத்துவின், அக்காள் அந்தோணியம்மாள் (70). இவர் சித்தையன்கோட்டை ஜான் தெருவில் கணவர் செல்வராஜுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு மேரி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், உடல் நல குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்னமுத்து உயிரிழந்தார். அவரது இறப்பு செய்தி அறிந்து வேதனையடைந்த அக்காள் அந்தோணியம்மாள் துக்கம் விசாரிப்பதற்காக கடந்த சனிக்கிழமை ஆத்தூருக்கு வந்திருந்தார். அங்கு தங்கையின் உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்.
அப்போது, அந்தோணியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அந்தோணியம்மாள் உயிரிழந்தார். தங்கை இறந்த அதிர்ச்சியில் அக்காள் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.