கோவில்பட்டி அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது!

 
murder

கோவில்பட்டி அருகே மதுபோதையில் தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா(73). விவசாயி. இவரது மகன் ஜெயக்குமார்(43). முன்னாள் ராணுவ வீரர். இவர் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தந்தை சுப்பையா அவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை சுப்பையாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.

kovilpatti

இதில் பலத்த காயமடைந்த சுப்பையா, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். மனைவியிடம் தகராறு செய்ததை கண்டித்த தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.