செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்... வளர்ப்பு தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்!

 
murder

புதுக்கோட்டை அருகே செலவுக்கு பணம் தர மறுத்த வளர்ப்பு தாயை, இளைஞர் உலக்கையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ராசாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் (48). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால், செல்வராஜ் (28) என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். சன்னாசி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். செல்வராஜ் சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், வீரம்மாள் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், செல்வராஜ், அடிக்கடி கிராமத்துக்கு வந்த தாய் வீரம்மாளிடம் செலவுக்கு பணம் வாங்கி சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் ராசாப்பட்டிக்கு வந்த செல்வராஜ், தாய் வீரம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். 

dead body

அப்போது, வீரம்மாள் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி, பணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், வீட்டில் இருந்து உலக்கையை எடுத்து தாய் வீரம்மாளை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, செல்வராஜ் அங்கிருந்து தப்பியோடினார். வீரம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி செல்வராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். செலவுக்கு பணம் தராததால் வளர்ப்பு தாயை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.