விருதுநகர் மாவட்டத்தில் டிச.21-ல் சிறப்பு கல்வி கடன் முகாம்... கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21, 22 ஆகிய 2 நாட்களில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 21ஆம் தேதி அன்று நடைபெறும் முகாமில், சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் எஸ்.ஆர்.என்.எம் கலை அறிவியல் கல்லூரியிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேந்த மாணவர்கள் பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீசௌடாம்பிகை பொறியியல் கல்லூரியிலும், ராஜாபாளையம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீபாலகிருஷ்ணா கலை அறிவியில் கல்லூரியிலும், வத்ராப் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் கலசலிங்கம் பல்கலை.யிலும், காரியாபட்டி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் சேது பொறியியல் கல்லூரியிலும், நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் திருச்சுழி ஒன்றிய அலுவலகத்திலும், விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் விஎஸ்விஎன் பாலிடெக்னிக் கல்லூரியிலும், டிசம்பர் 22 அன்று நடைபெறும் முகாமில், சிவகாசி வட்டாரத்தை மாணவர்கள் எஸ்.எப்.ஆர். கலை அறிவியல் கல்லூரியிலும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 20 நாட்களுக்குள் கடன் ஆணைகள் வழங்கப்படும்.
மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவ / மாணவியர் மற்றும் பெற்றோரின் 3 புதிய புகைப்படம், வங்கி joint account பாஸ்புக் நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், ஆதார் நகல், பான் கார்டு நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விபரம், 10, 12ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.