ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா, ரங்கா என கோஷம் எழுப்பிய படி வடத்தை பிடித்து இழுத்தனர். 

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோன பரவல் குறைந்துள்ளதால், இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க குதிரை, தங்க கருடன், பூந்தேர், கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

srirangam

இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு  சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். தொடர்ந்து, காலை 6.15 மணிக்குள் தேரில் மேஷ லக்னத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். அப்போது, நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ரெங்கா, ரெங்கா என கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

கீழக்கு சித்திரை வீதியில் புறப்பட்ட தேர், தெற்கு சித்திரை வீதி வழியாக, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை சென்றடைந்தது. சித்திரை தேரோட்டத்தையொட்டி,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனனர். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, நாளை திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தா வரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் ஆளும் பல்லக்குடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.