ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.63 லட்சம் வசூல்!

 
srirangam hundial

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.63 லட்சம் ரொக்கப்பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்கி விருகிறது. மேலும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்வர். இந்த நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. 

srirangam

அதன் படி, நேற்று கோவில் இணை ஆணையர் மாரித்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, உதவி ஆணையர்கள் கந்தசாமி, மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில், கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.63 லட்சத்து 96 ஆயிரத்து 860  ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 115 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளியும் மற்றும் 59 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலானது.