ஓடும் காரில் திடீரென பற்றி எரிந்த தீ... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் இருந்து மோகன்ராஜ் என்பவர் தனது காரில் திருச்சிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். மணப்பாறை அருகே சென்றபோது திடீரென காரின் முன்பகுதியில் புகை வெளியேறி உள்ளது. இதனை கவனித்த மோகன்ராஜ் உடனடியாக சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று பார்த்துள்ளார்.
அப்போது, காரின் முன் பகுதியில் தீப் பற்றியது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.மேலும், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால், அதற்குள்ளாக மளமளவென கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணிநேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. உரிய நேரத்தில் மோகன்ராஜ் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.