ஈரோடு அருகே நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை!
ஈரோடு அருகே நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அருகே உள்ள முள்ளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவர் அதே பகுதியில் நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மாதுகுமார் என்பவர் ராஜேஷுக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ராஜேஷும், மாதுகுமாரும் , பழனிச்சாமி என்பரது தோட்டத்தில் உள்ள சிமெண்ட் சீட்டுசெட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், ராஜேஷ் தூங்க செல்வதாக கூறிவிட்டு தான் தங்கிருக்கும் அறைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
மாதுகுமார் அறையின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை மாதுகுமார் எழுந்துசென்று பார்த்தபோது, ராஜேஷ் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாதுகுமார், இதுகுறித்து காஞ்சிகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார், ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.