"நாமக்கல் மாவட்டத்தில் 1,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு" - ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்

 
copra

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் 1000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும், இதில் தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு  அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு 1000 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

namakkal collector

தற்போது தேங்காய்ப்பருப்பு விலை 1 கிலோ ரூ.73.19/- முதல் ரூ.90.99/- வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவரைக் கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.105.90/-க்கும், பந்து கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.110.00/-க்கும், ஆறு மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் பரமத்திவேலூர்  ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

copra

தேங்காய் கொப்பரை கொள்முதல் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 31.07.22 வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.