தஞ்சை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!
தஞ்சை அருகே பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள படுகை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். லாரி ஓட்டுநர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், சுதாகர் தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்த முடிவெடுத்து உள்ளார்.
இதுகுறித்து சங்கீதாவிடம் கூறியபோது, அவர் தனது பெற்றோரிடம் தற்போது பணம் இல்லை என்றும், சில மாதங்களுக்கு பின்னர் நடத்தும் படி கூறியுள்ளார். ஆனால், அதனை சுதாகர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தனியாக இருந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சங்கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.