திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!
திருவண்ணாமலை அருகே திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள வேடந்தவாடி பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(37). இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சண்முக சுந்தரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சண்முக சுந்தரி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த அவர், கடந்த மாதம் 22ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த சண்முக சுந்தரியை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருணமான 10 மாதத்தில் சண்முக சுந்தரி தற்கொலை செய்ததால், வரதட்சணை கொடுமை காரணமா? என கோட்டாட்சியர் விசாரித்து வருகின்றனர்.