ஆம்பூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
car fire

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது காரை வாடகைக்கு எடுத்திருந்த நவாஸ் என்பவர் சென்னைக்கு சென்றுவிட்டு, ஆம்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கொமேஸ்வரம் என்ற இடத்தில் வந்தபோது கார் திடீரென பழுதாகி உள்ளது.

tirupattur

இதனால், நவாஸ், தனது நண்பருடன் சேர்ந்து காரை தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். கன்னிகாபுரம் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியாகி உள்ளது. சிறிது நேரத்திற்குள் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான நவாஸ், இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.  தீ விபத்து குறித்து ஆம்பூர் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.