திண்டுக்கல் அருகே இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை... குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்!

 
dgl

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் மனைவியை கழுத்து அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். தொழிலாளி. இவரது மனைவி தேவிகா(32). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தேவிகா கணவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த சில மாதங்களாக அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில், 3 மகன்களுடன் வசித்து வந்தார்.

கக

இந்த நிலையில், நேற்று தேவிகாவின் வீட்டிற்கு வந்த ராஜசேகர், அவரை சேர்ந்து வாழ அழைத்துள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவிகாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

இது குறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார், தேவிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ராஜசேகரை தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.