திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து - தந்தை, மகன் பலி!

 
accident

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 வயது சிறுவன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் டி.கல்லேரி பகுதியை சேர்ந்தவர் முனியன். கூலி தொழிலாளி. இவருக்கு செந்தூர பாண்டியன்(12), லோகேஷ்வரன்(9) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 7 மற்றும் 4ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது மகன்களுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த முனியன், பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

tiruvannamalai

வானாபுரம் என்ற இடத்தின் அருகே சென்றபோது முனியன் இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் நிலை தடுமாறி விழுந்த முனியன், அவரது மூத்த மகன் செந்தூர பாண்டியன் ஆகியோர் மீது டிராக்டர் சக்கரம் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லோகேஷ்வரன் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த வெறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த முனியன், செந்தூரபாண்டியன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.