கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆலை விபத்தில் டிராக்டர் ஒட்டுநர் பலி!
கிருஷ்ணகிரி அருகே தனியார் கிரானைட் நிறுவனத்தில் இயந்திர பெல்ட் அறுந்து விழுந்ததில் டிராக்டர் ஒட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (36). இவர் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நாகராஜ் நேற்று முன்தினம் பேரிகை அடுத்த தாசன்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிரானைட் நிறுவனத்தில் கழிவு கிரானைட் கற்களை ஏற்றுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆலையில் இருந்த இயந்திர பெல்ட் அறுந்து, நாகராஜின் மீது விழுந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.