திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலி... கிருஷ்ணகிரி அருகே சோகம்!

 
drowned drowned

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் உரிகம் பகுதியை சேர்ந்தவர் சிவமாதன். இவரது மகன் சிவா (21). இவருக்கும், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சின்னராஜ் என்பவரது மகள் அபிநயாவுக்கும் (18) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், உரிகம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தார்.

நேற்று, அந்த பகுதியில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்ற அபிநயா, அங்குள்ள குட்டையில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத ஆழமான பகுதிக்கு சென்ற அபிநயா, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார்.  சற்று தொலைவில் நின்றிருந்த சிவா, அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து, உடனடியாக ஓடிச் சென்று குட்டைக்குள் குதித்து அபிநயாவை மீட்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

dead

இதனை கண்ட கிராமத்து இளைஞர்கள் குட்டைக்குள் இறங்கி தேடியபோது, இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலின் பேரில் அஞ்செட்டி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.