திருச்சி அருகே பைக் மீது லாரி மோதல் - ஒருவர் பலி!
திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(48). தொழிலாளி. இவர் நேற்று ஆமூரில் இருந்து திருச்சிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் துடையூர் அருகே சென்றபோது கல்யாணசுந்தரம் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற டாரஸ் லாரி, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட கல்யாணசுந்தரம் பலத்த காயமடைந்தார்.
அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வாத்தலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஒட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.