தஞ்சையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருடிய இருவர் கைது... 5 பவுன் நகை பறிமுதல்!

 
tanjore

தஞ்சையில் மூதாட்டியை கட்டிப்போட்டு விட்டு தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவத்தில் 2 நபர்களை கைதுசெய்த போலீசார். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் அருளானந்த நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ஸ்தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி(80). இவரது கணவர் இறந்த நிலையில், பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஆக்னஸ்மேரி தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி ஆக்னஸ்மேரியின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள், வாடகைக்கு வீடு பார்க்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனை நம்பி ஆக்னஸ்மேரி அவர்களை வீட்டிற்குள் அழைத்துச்சென்றபோது, திடீரென அவர்கள் மூதாட்டியை நாற்காலியில் கட்டிப்போட்டு விட்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் வளையல்கள், ஒரு பவுன் மோதிரம் என  5 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

thanjavur

தஞ்சை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  மேலும், தஞ்சை டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ராஜு, பாலகிருஷ்ணன் ஆகியோர் மூதாட்டியிடம் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனர்.