தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது... 1 கிலோ கஞ்சா, ரூ.58 ஆயிரம் பணம் உள்ளிட்டவை பறிமுதல்!
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.58 ஆயிரம் பணம், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜுடி, உதவி ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி கே.டி.சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக காரில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் கே.டி.சி நகரை சேர்ந்த ஞானராஜ்(38) மற்றும் குமரன் நகரை சேர்ந்த இசக்கிராஜா(29) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1.125 கிலோ கஞ்சா, ரூ.58 ஆயிரம் பணம், 4 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மதுவிலக்குப்பிரிவு போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.