ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி சிறுமி உள்பட இருவர் பலி!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்தபோது சிறுமி உள்பட இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சித்த மருந்துகள் விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று, தனது அண்ணன் மகள் தர்ஷினி(15), உறவினர் நாகேஸ்வரி உள்ளிட்டோருடன் ஆத்தூர் காமராஜர் நீர்த் தேக்கத்திற்கு குளிப்பதற்காக சென்றிருந்தார். நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது நாகேஸ்வரி ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.

drowned

இதனை கண்ட செல்வகுமார், அவரை காப்பாற்றிய நிலையில் எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். அப்போது, செல்வகுமாரை காப்பாற்ற சென்ற சிறுமி தர்ஷினியும் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் செம்பட்டி போலீசார் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, செல்வகுமார், சிறுமி தர்ஷினி ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர், இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.