ராசிபுரம் அருகே சுற்றுலா வேன் மோதி உதவி ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் பலி!

 
accident

ராசிபுரம் அருகே இன்று அதிகாலை விபத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. தகவல் அறிந்த ராசிபுரம் காவல் நிலைய காவலர் தேவராஜ் உள்ளிட்ட 2 காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விபத்து நடைபெற்ற பகுதி புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், மற்றொரு உதவி ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

rasipuram

அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஓன்று சாலைத் தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதனை அடுத்து, போலீசார் மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருநள்ளாரில் இருந்து சேலம் நோக்கி சென்ற சுற்றுலா வேன் போலீசார் மீது மோதியது. இந்த விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், காவலர் தேவராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 காவலர்கள் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 2 போலீசாரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.