திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - கல்லூரி மாணவர் பலி!

 
மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன்கள் கார்த்திகேயன், விக்னேஸ்வரன். இவர்கள் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கல்லூரி முடித்து விட்டு சகோதரர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்று சென்று கொண்டிருந்தனர்.  திருப்பரங்குன்றம் அருகே மூலக்கரை என்ற இடத்தில் சென்றபோது, விளாச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சாலையை கடக்க முயன்றார்.

மதுரை

அப்போது, எதிர்பாராத விதமாக கார்த்திகேயன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சீனிவாசனின் வாகனம் மீது அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த விக்னேஸ்வரன் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவர் தலையின் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திகேயன் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார், விக்னேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.  தொடர்ந்து, இந்த விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்து தொடர்பான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.