கோவில்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; பிளஸ் 1 மாணவர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பிளஸ் 1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி ஸ்ரீபுஷ்பராஜ் தனது உறவினரின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். விழா முடிந்து பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அடுத்த மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது ஸ்ரீபுஷ்பராஜ் வானத்தின் மீது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் புஷ்பராஜ் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சங்கனாப்பேரி பகுதியை சேர்ந்த இறையணன் (43) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீபுஷ்பராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இறையணனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபுஷ்பராஜின் தந்தை கனகராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.