வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து 5ஆம் திருநாள்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவத்தின் 5ஆம் நாளான இன்று அரங்கநாத சுவாமி, பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, பகல் பத்து உற்சவத்தில் நாள்தோறும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அதன்படி, பகல் பத்து உற்சவத்தின் 5ஆம் நாளான இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில், திரு மார்பில் விமான பதக்கம், ரத்தின அபய ஹஸ்தம், முத்துச்சரம் மற்றும் அடுக்கு பதக்கத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, பன்னிரு ஆழ்வார்கள் புடைசூழ ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
அப்போது பக்தர்கள் ரங்கா, ரங்கா என பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கமிட ராஜ நடை போட்டு, அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். அங்கு நம்பெருமாளை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.