அந்தியூர் அருகே மரத்தின் மீது வேன் மோதி விபத்து... சிறுமி பலி, 10 பேர் படுகாயம்!

 
accident

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையோர மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் குமார். தொழிலாளி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 வயதில் மகாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்த சம்பத்குமார், மனைவி, மகள் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த பக்தர்களுடன் இன்று அதிகாலை வேனில் மேல் மருவத்தூருக்கு புறப்பட்டார். வேனை சேலம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த கௌதம் என்பவர் ஓட்டிச்சென்றார். முரளி நகர் பிரிவு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த மரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பத்குமாரின் மகள் மகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

anthiyur

மேலும், சம்பத்குமார், அவரது மனைவி, வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிதிருப்பூர் போலீசார், இறந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.