திண்டுக்கல் அருகே துணிகரம்... மளிகைக்கடை பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.12 லட்சம் பணம் கொள்ளை!

 
robbery

திண்டுக்கல் அருகே மளிகைக்கடையின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அதிகாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். இவர் தனது வீட்டின் பின்னால் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சமீபத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த பணம் ரூ.12 லட்சம் மற்றும் 30 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை மளிகைக் கடையின் கல்லாபெட்டியில் வைத்திருந்துள்ளார்.

dindigul

இந்த நிலையில் நேற்றிரவு வியாபாரம் முடிந்து, மனோகர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று துங்கியுள்ளார். இந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக மனோகர் வெளியே வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும், மேற்கூரை ஓடுகளும் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மனோகர், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.12 லட்சம் பணம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக மனோகர் அளித்த புகாரின் பேரில், சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த  கொள்ளை சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.