கணவர் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு... புதுக்கோட்டை அருகே சோகம்!

 
dead

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை பார்த்த, அவரது மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள துவரவயல் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் திருநாவுக்கரசு(33). தொழிலாளி. இவருக்கும், வினிதா(26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகளும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திருநாவுக்கரசு மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். 

pudukkottai GH

அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தார்.  பிரேத பரிசோதனைக்கு பின்னர் திருநாவுக்கசுவின் உடல் நேற்று துவரவயல் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. வாகனத்தில் இறக்கி வைக்கப்பட்ட அவரது உடலை கண்ட மனைவி வினிதா திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வினிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். 

தகவலின் பேரில் கீரனூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, வினிதா உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கணவர் சடலத்தை பார்த்து மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.