குடும்ப தகராறில் மயக்கமடைந்த மனைவி... இறந்துவிட்டதாக கருதி தற்கொலை செய்துகொண்ட கணவர்!

 
suicide

விருத்தாசலம் அருகே தான் தாக்கியதில் மனைவி உயிரிழந்து விட்டதாக கருதி, தூக்கிட்டு கொண்ட தொழிலாளி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. விவசாயி. இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி வீட்டில் சமையல் செய்யவில்லை என வீரமணி, மனைவி விஜயசாந்தியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த வீரமணி, மனைவியை கைகளால் தாக்கி உள்ளார். இதில் விஜயசாந்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

virudhachalam

தான் அடித்ததால் மனைவி உயிரிழந்து விட்டதாக எண்ணிய வீரமணி, குற்ற உணர்வில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். சிறிது நேரத்தில் கண்விழித்த விஜயசாந்தி, வீரமணி தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீரமணியை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரமணியின் தந்தை ராஜேந்திரன், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் தாக்கியதில் மனைவி இறந்ததாக கருதி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.