கோவில் திருவிழா மோதலில் பெண் அடித்துக்கொலை... துறையூர் அருகே பயங்கரம்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் பெண் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் - சிவகாமி தம்பதியினர். இவர்களது மகன்கள் சந்திரசேகர், கார்த்திக். அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. திருவிழாவின்போது அம்மன் வீதிஉலா செல்வதற்கு சந்திரசேகர், கார்த்தி ஆகியோர் தங்களது டிராக்டரில் ஏற்றும் படி தெரிவித்துள்ளனர். அதற்கு அதே பகுதியை சேர்ந்த வினோத், முரளிதரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பிரனகுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சந்திரசேகரும், கார்த்தியும் தங்களது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, வினோத், முரளிதரன் உள்ளிட்ட 5 பேர் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வாக்குவாதம் முற்றியதில் சந்திரசேகர் மற்றும் கார்த்தியை எதிர் தரப்பினர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான சிவகாமி, அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது, எதிர் தரப்பினர் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி அருள்மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, துறையூர் போலிசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, வினோத், முரளிதரன் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.