நாமக்கல் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை!
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்படுவூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ரித்திகா(5), பூவரசன்(4) என 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம்பிள்ளை பகுதியில் உள்ள செங்கல்சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் சேட்டை செய்ததால், அவர்களை கீதா கண்டித்துள்ளார். அதற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், மனமுடைந்த கீதா வீட்டில் தனியாக இருந்தபோது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்து திருவண்ணாமலையில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், மீண்டும் கீதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.