திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் தற்கொலை... தென்காசி அருகே சோகம்!
தென்காசி அருகே திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள சீவல்சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். தொழிலாளி. இவருக்கும், உறவினரின் மகளான மனிஷா (18) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், மனிஷாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை மனிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மனிஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான 2 மாதங்களில் மனிஷா உயிரிழந்ததால், வரதட்சணை கொடுமை காரணமா? என வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.