நத்தம் அருகே பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு; மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததை கண்டித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி(29). 2-வது முறையாக கர்ப்பம் தரித்த இவர், பிரசவத்திற்காக அருகில் உள்ள சிறுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து, தனலட்சுமிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து, அவரை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் முலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தனலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தனலட்சுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி சிறுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின் பேரில அங்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.