சாத்தான்குளம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிபாதமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மேலமீரான்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. விவசாயி. இவரது மனைவி மூக்கம்மாள் (58). இவர் நாள்தோறும் காலையில் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாலையில் ஓட்டிவருவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்ட கால்நடைகளை ஓட்டி வருவதற்காக தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது, தோட்டத்தில் மின்கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்துள்ளது. இதனை கவனிக்காத மூக்கம்மாள், எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் மூலக்கரைப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.