செங்கல்சூளை உரிமையாளர் தாக்கியதால் வேதனையில் தொழிலாளி தற்கொலை... லால்குடி அருகே சோகம்!

 
poison

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கல்சூளை உரிமையாளர் தாக்கியதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன்(53). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன்கள் பிரசாந்த், சக்திவேல். இவர்கள் 3 பேரும் கீழ் அன்பில் பகுதியில் செயல்பட்டு வரும் ராஜிவ்காந்தி என்பவருக்கு சொந்தமான  செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். சூளை உரிமையாளரிடம், நாகேந்திரன் முன் பணம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாததால் நாகேந்திரனும், அவரது மகன்களும் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். 

lalgudi

இதனால் சூளை உரிமையாளர் ராஜிவ்காந்தி, நேற்று முன்தினம் நாகேந்திரனின் வீட்டிற்கு சென்று இதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில், நாகேந்திரனை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நாகேந்திரன், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் நேற்று உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து நாகேந்திரனின் உறவினர்கள் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் செங்கல்சூளை உரிமையாளர் ராஜிவ்காந்தி மீது தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.