சூலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி... பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது சோகம்!
கோவை மாவட்டம் சூலூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் வி.ஓ.சி நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகன்கள் மணிகண்டன், சிவபிரகாஷ். இவர்கள் கோவை மாவட்டம் சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள தனியார் ஸ்னாக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ் என்பவருக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனையொட்டி, பணி முடிந்த பிறகு மணிகண்டன், சிவபிரகாஷ் உள்ளிட்ட தொழிலாளர்கள் அருகில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் மீது கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது, மதுபோதையில் இருந்த சிவபிரகாஷ், கிணற்றின் மீது ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி 150 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உள்ளிட்டோர் படுகட்டு வழியாக இறங்கி அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. மேலும், மணிகண்டன் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்தார். இதுகுறித்து சக தொழிலாளிகள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி, மணிகண்டனை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து, தேடுதல் பணியில் ஈடுபட்ட அவர்கள் சிவபிரகாஷை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சூலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, இளைஞர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.