வீரபாண்டி கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

 
theni

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மான் கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட ராட்டினங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மோகன் என்பவர், டிஸ்கோ பிரேக்  ராட்டினம் அமைத்துள்ளார். இவரிடம் உப்பார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்ற தொழிலாளி தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்.  

theni

இந்த நிலையில், நேற்று டிஸ்கோ பிரேக் ராட்டினத்தின் துண் ஒன்று சாய்ந்த நிலையில் இருந்துள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் தொழிலாளி முத்துக்குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது, தூணை நிமிர்த்தியபோது, அருகில் இருந்த உயர் கோபுர மின்விளக்கின் ஒயர், தூணின் மீது பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.  இதில் தூக்கிவீசப்பட்ட முத்துக்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வீரபாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே முத்துக்குமார் உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முத்துகுமாருக்கு சுமித்ரா என்ற மனைவியும், விஷாலினி(10), விஷால் பாண்டி(7) மற்றும் ஷபானாஸ்ரீ  என்ற 6 மாத குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.