பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி... முயல் வேட்டைக்கு சென்றபோது சோகம்!

 
dead

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தோட்டத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள செங்கன் பசுவந்தலாவ் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (40). கூலி தொழிலாளி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது, செங்கன் பசுவந்தலாவ் அருகே முத்து என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், தக்காளி, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

palakodu

இந்த நிலையில், முயல் வேட்டைக்கு சென்ற நரசிம்மன் எதிர்பாராத விதமாக முத்து தோட்டத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார், நரசிம்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த முத்துவை கைது செய்து,விசாரித்து வருகின்றனர்.