அரியலூர் அருகே மரம் வெட்டும் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மரம் வெட்டும் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நத்தவெளி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் சௌந்தரராஜன்(30). இவர் மரம்  வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு புறப்பட்டு சென்ற சௌந்தரராஜன், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி சுத்தமல்லி பகுதியில் உள்ள மரத்தில் தனது கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

suicide

தகவலின் பேரில் உடையார் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சௌந்தரராஜன் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தா.பழுர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, சௌந்தரராஜன் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.