ஓசூரில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி மூச்சுத்திணறி பலி!

 
dead

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்த செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளத்தை சேர்ந்தவர் சண்முகம். கட்டிட தொழிலாளி. இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகரில் தங்கி கட்டிட் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், நேற்று திருவள்ளுவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை தூய்மை செய்யும் பணிக்கு சென்றிருந்தார்.

hosur

இதற்காக சண்முகம் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியபோது, திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக சண்முகத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார், சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.