திருப்பத்தூர் அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் மரணம் - ஆர்.டி.ஓ விசாரணை!

 
dead

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது மகன் கந்தசாமி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவருக்கும் (21) கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 1 மாதத்தில் கந்தசாமி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.  இதனால் சினேகா கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சினேகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற நிலையில், அங்கு சினேகா உயிரிழந்தார். 

sivagangai

இந்த சம்பவம் குறித்து ஊர்குளத்தான்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 9 மாதத்தில் சினேகா இறந்ததால் இந்த சம்பவம் குறித்த தேவக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை விசாரித்து வருகிறார்.