வந்தவாசி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... சார் ஆட்சியர் விசாரணை!

 
suicide

வந்தவாசி அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகள் அமுதா(22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வந்தவாசி அருகே உள்ள காவேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் முருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சக்திவேல்முருகன், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

vandavasi

இதனிடையே கணவர் வீட்டினர் அமுதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அமுதாவின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவரது கணவர் சக்திவேல்முருகன், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதாவின் உறவினர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அமுதா தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அமுதாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அமுதாவின் தந்தை ஏகாம்பரம், மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி கீழ்கொடுங்காடுலுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கணவர் வீட்டினரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் அமுதா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து செய்யாறு சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.