பெரம்பலூரில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை!
பெரம்பலூரில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் மல்லபுரம் ஊராட்சி குமாரநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிருந்தா (19). இவருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பூபதி(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பெரம்பலூரில் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வசூலிக்கும் தொழில் செய்து வந்த பூபதி, திருமணத்திற்கு பின் பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகர் 2-வது குறுக்குத் தெருவில் மனைவி உடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த பிருந்தா கடந்த திங்கட்கிழமை கணவர் வேலைக்கு புறப்பட்டு சென்ற பின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு பூபதி வீட்டிற்கு வந்தபோது பிருந்தா தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 3 மாதத்தில் பிருந்தா தற்கொலை செய்ததால் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.