காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... திருமணமான 10 நாட்களில் சோகம்!
வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்த 10 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினித். இவரும், வாணியம்பாடி அடுத்துள்ள காமராஜபுரத்தை சேர்ந்த நிவேதா (21) என்பவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து, இரு வீட்டினர் சம்மதத்துடன் கடந்த மாதம் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் நிவேதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நிவேதா தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நிவேதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நிவேதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருணமான 10 நாட்களில் நிவேதா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.