கணவர் மதுப்பழக்கத்தை கைவிடாததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... குமரி அருகே சோகம்!
கன்னியாகுமரி அருகே கணவர் மதுப் பழக்கத்தை கைவிடாததால் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் ஊராட்சிக்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்தவர் சத்தியதாஸ். இவரது மகள் கிறிஸ்டல் சவுமியா(32). இவருக்கு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மேல்புறம் ஒன்றியம் அம்பேற்றன்காலை பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சந்திரகுமார் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் சவுமியா, அவரை மதுப்பழக்கத்தை கைவிடும்படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சந்திரகுமார் அதனை கேட்காவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சவுமியா மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிறிஸ்டல் சவுமியாவின் தந்தை பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.