வாணியம்பாடி அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை!

 
 suicide

திருப்பத்தூர் மாவட்டம் வணியம்பாடி அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள பனந்தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கீதா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து, ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 

alangayam

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மாலை வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சங்கீதா, அன்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளில் சங்கீதா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி ஆர்.டி.ஓ விசாரித்து வருகிறார்.