திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... நாட்றம்பள்ளி அருகே சோகம்!

 
suicide

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சிக்குட்பட்ட மணியகார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலாளி. இவருக்கு சுவேதா (22) என்ற மனைவியும் 2 வயதில் ஜெயஸ்ரீ (2) பெண் குழந்தையும் உள்ளனர். இந்த  நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுவேதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று சுவேதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தியடைந்த  சுவேதா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

natrampalli

தகவல் அறிந்து வந்த திம்மாம்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த சுவேதாவின் உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது உடலை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு தூக்கிச்சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுவேதாவின் இறப்புக்கு அவரது கணவர் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் திம்மம்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, போலீசார் சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் சுவேதா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.