காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... குமரி அருகே சோகம்!
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகேயுள்ள வடக்கு சூரங்குடியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகள் விஷ்ணுதேவியை (32) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இத்தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. பாக்கியராஜ் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், விஷ்ணுதேவி தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டு கொடுப்பது தொடர்பாக விஷ்ணு தேவிக்கும், அவரது மாமனார் பொன்னுபிச்சைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த விஷ்ணு தேவி, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடிச்சென்று விஷ்ணுதேவியை மீட்டு குமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விஷ்ணுதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விஷ்ணுதேவியின் தந்தை மணி ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 4 ஆண்டுகளில் விஷ்ணுதேவி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.