அரியலூர் அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
arrest

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்ற செங்கல்சூளை தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள சுண்டிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி சிவா (29) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

pocso

இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அவரை சிவா கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது  பெற்றோர், இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இளைஞர் சிவா அவரை கடத்திச் சென்று, பெண்ணாடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொழிலாளி சிவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.