காதல் திருமணம் செய்த 20 நாளில் இளைஞர் மரணம்... கள்ளக்குறிச்சி அருகே சோகம்!
கள்ளக்குறிச்சி அருகே காதல் திருமணம் செய்த 20 நாட்களில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பெரியசாமி(31). கூலி தொழிலாளி. இவர் மஞ்சு(21) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை புதுமண தம்பதியினர் இரவு உணவை சாப்பிட்டு விட்டு, வீட்டில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது, பெரியசாமிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, அவருக்கு நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பெரியசாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார், பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பெரியசாமியின் தந்தை செல்லமுத்து அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 20 நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.