ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

 
suicide

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயிலில் இருந்து தவறி விழுந்து நெல்லையை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவையில் இருந்து குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கொளாநல்லி ரயில்வே கிராசிங் அருகே சென்றபோது, ரயில் படிக்கட்டில் நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

perundurai govt hospital

தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த  இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்த நபர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் பரமசிவம்(31) என தெரியவந்தது.

இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறைக்காக நாகர்கோவில் செல்லும் ரயிலில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, படியின் அருகே நின்று செல்போன் பேசியபோது தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, நேற்று மாலை உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.